திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-09 22:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் பெரிச்சிபாளையம் எம்.ஆர்.தோட்டம் எம்.ஆர். காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 43). இவர் திருப்பூர் மாநகராட்சி 50, 51-வது வார்டு பகுதிகளில் குடிநீர் திறப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 1-ந் தேதி கரூரில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்காக ராமச்சந்திரன் அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் காலை 8 மணி அளவில் திருப்பூர்-தாராபுரம் ரோடு சங்கிலிப்பள்ளம் பாலம் அருகே அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கூர்மையான ஆயுதத்தால் அவரது முகத்தில் சரமாரியாக குத்தப்பட்டிருந்தது. அவரது கைகளில் சிராய்ப்பு காயங்களும் இருந்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று, ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ராமச்சந்திரன் கரூருக்கு செல்வதற்காக சங்கிலிப்பள்ளம் பாலம் அருகே நடந்து சென்ற போது, அவரை புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கக்கன்ஜிநகரை சேர்ந்த சமயபாண்டி (24), கும்பகோணம் திருவிடைமருதூரை சேர்ந்த பிரதாப் (22) மற்றும் சென்னையை சேர்ந்த ராஜதுரை (20) ஆகிய 3 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 3 பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை கொலை செய்துள்ளனர்

அத்துடன், அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியது தெரியவந்தது. இந்த நிலையில் பனியன் நிறுவன தொழிலாளர்களான சமயபாண்டி, பிரதாப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுகுடிப்பதற்கு பணம் இல்லாமல் வழிப்பறியில் ஈடுபட்டு, அவர்கள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜதுரையை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே திருப்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வைத்து நேற்று தனிப்படை போலீசார் ராஜதுரையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்