5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 8 மாத குழந்தை உயிர் தப்பியது

சென்னையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 8 மாத குழந்தை உயிர் தப்பியது.

Update: 2019-12-09 23:45 GMT
பெரம்பூர்,

சென்னை தங்கசாலை பகுதியில் வசித்து வருபவர் மெய்பால். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி நீலம். இவர்களுக்கு 8 மாதத்தில் திநிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.

மெய்பால், தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டார். நீலம், தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று மாலை நீலம், சமையல் செய்து கொண்டிருந்தார். வீட்டின் பால்கனியில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை திநிஷா, 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது.

அப்போது அந்த குடியிருப்பின் கீழே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் வந்து குழந்தை விழுந்தது. இதனால் காலில் லேசான காயத்துடன் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. உடனடியாக குழந்தையை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை யாராவது பால்கனியில் இருந்து தூக்கி வீசினார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்