திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-12-10 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருக்கார்த்திகை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் பெண்கள் வண்ண கோலங்களிட்டு, அகல் விளக்குகளை ஏற்றி வரிசையாக அடுக்கி வைத்து, உறவினர்களுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

முன்னதாக வெல்லம் கலந்த அவல் பொரியை சாமிக்கு படைத்து வழிபட்டனர். திருவாரூர் வீதிகள் முழுவதும் நேற்று அகல்விளக்கு களாக ஜொலித்தன.

சொக்கப்பனை

திருக்கார்த்திகை திருநாளையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில், கமலாலய குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், குமரகோவில், பழனியாண்டவர் கோவில், திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் கிழக்கு கோபுர வாசல் முன்பு பனை மட்டைகளை அடுக்கி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்