சேலம் அருகே சொகுசு பஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை? போலீசார் விசாரணை

சேலம் அருகே தனியார் சொகுசு பஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக வந்த புகார் குறித்து சங்ககிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-10 22:15 GMT
சேலம்,

கோவையை சேர்ந்தவர் ஹரிஷ்(வயது 32), எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை தனியார் சொகுசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டு வந்தார்.

இந்த பஸ், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது, தனது பையை காணவில்லை என்று கண்டக்டரிடம் கூறியுள்ளார். அந்த பையில் ரூ.1 கோடி எடுத்து வந்ததாகவும், அதை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சங்ககிரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஹரிசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோவையில் இருந்து நகைைய ஐதராபாத்தில் விற்றுவிட்டு அதன்மூலம் பெற்ற ரூ.1 கோடியை கொண்டு வந்ததாக அவர் கூறியுள்ளார்.அவர் ஐதராபாத்தில் யாரிடம் பணத்தை வாங்கி கொண்டு வந்தார்? பணத்தை அவர் பறிகொடுத்தது உண்மை தானா? அந்த தனியார் சொகுசு பஸ்சில் இருந்து நடுவழியில் யாராவது இறங்கி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பொய் புகார் கொடுத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்