ரூ.18 கோடியில் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி தமிழக போக்குவரத்து துறை ஆணையாளர் ஆய்வு

நெல்லை அருகே ரூ.18 கோடியில் அமைய உள்ள கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியை தமிழக போக்குவரத்து துறை ஆணையாளர் ஜவஹர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-12-10 23:00 GMT
பேட்டை,

தமிழக சட்டசபையில் கடந்த 2001, 2002-ம் ஆண்டு நடந்த போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது நெல்லை மாவட்டத்தில் சாலை போக்குவரத்து துறையால் சர்வதேச தரத்தில் கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் 10 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது.

அந்த இடத்தை தமிழக போக்குவரத்து துறை ஆணையாளர் ஜவஹர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த இடத்திற்கான ஆவணங்கள், வரைபடம், திட்ட வரைவு குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது, ஜவஹர் கூறியதாவது:-

ரூ.18 கோடியில்...

தமிழகத்தில் கனரக, இலகுரக வாகன பயிற்சி பள்ளியானது கும்மிடிபூண்டியில் உள்ளது. 2-வதாக சுத்தமல்லியில் ரூ.18 கோடியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி பள்ளியில் 3 ஆயிரம் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வாகன பயிற்சி, புத்தாக்க பயிற்சி, மறுஉரிமம் பெறுவது உள்ளிட்ட அனைத்து வகையான ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1.32 கோடி வருமானம் கிடைக்கும். இதற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுத்தமல்லி பகுதியில் ரிங் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் திருவம்பலம்பிள்ளை, போக்குவரத்து இணை ஆணையாளர் ரவிச்சந்திரன், பொது மேலாளர் துரைராஜ், உதவி இயக்குனர் கருணாநிதி, உதவி பொறியாளர் மார்ட்டின் சுரே‌‌ஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஷேக் முகம்மது, கருப்பசாமி, நெல்லை தாசில்தார் ராஜேசுவரி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், பர்வீன், பாத்திமா, நெல்லை சர்வேயர் அல்அமீன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்