கோபி அருகே, கார் மோதி 2 பெண்கள் பலி

கோபி அருகே பஸ்சுக்காக காத்து நின்றபோது கார் மோதி 2 பெண்கள் பலியாகினர்.

Update: 2019-12-10 22:45 GMT
கடத்தூர், 

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். விவசாயி. இவருடைய மனைவி ஜோதிமணி (வயது 40).

இதேபோல் பொலவக்காளிபாளையம் கஸ்பா வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (53).

ஜோதிமணியும், சாந்தியும் தங்களுடைய வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கோபி புறப்பட்டனர். இதற்காக அவர்கள் பஸ்சில் செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று நிலைதடுமாறி பஸ்சுக்காக காத்து நின்ற சாந்தி, ஜோதிமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை கண்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடோடி வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற காரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்