அருணாசல பிரதேசத்தில் விபத்து, மதுரை ராணுவ வீரர் பலி
அருணாசல பிரதேசத்தில் நடந்த விபத்தில் மதுரை ராணுவ வீரர் உயிரிழந்தார்.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி நாகராஜன். அவருடைய மகன் பாலமுருகன் (வயது 26). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இந்திய ராணுவ பணியில் சேர்ந்தார்.
கடந்த 9 வருடங்களாக ராணுவத்தில் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருணாசலபிரதேச மாநிலத்தில் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர்.
இந்த முகாமில் பாலமுருகனும் இருந்தார். ராணுவ வண்டி மூலம் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு முகாமினை மாற்றினர். அப்போது ராணுவ வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலமுருகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடு்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.