கல்வராயன்மலையில், 2,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - வனத்துறையினர் நடவடிக்கை

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2,500 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2019-12-11 22:45 GMT
கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு சிலர் சாராயம் காய்ச்சி அதனை புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் இன்னாடு வனச்சரகர் ராஜா தலைமையிலான வனத்துறையினர் கல்வராயனமலையில் உள்ள மணியார்பாளையம், இன்னாடு, ஈச்சங்காடு, அத்திப்பாடி உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சங்காடு, அத்திப்பாடி வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் செல்லும் தண்ணீரை பயன்படுத்தி சிலர் சாராய ஊறல் அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறலை வனத்துறையினர் கைப்பற்றி, அதனை அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்