மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், 30 அடி உயர பாலத்தில் இருந்து விழுந்து பிளஸ்-2 மாணவர் பலி - நண்பருக்கு தீவிர சிகிச்சை

மதுரையில் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது பஸ் மோதியது. இதில் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒருவர் இறந்தார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2019-12-12 21:30 GMT
மதுரை, 

மதுரை புதூர் சூர்யா நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சுதர்சன்(வயது 17). மூன்றுமாவடி பகுதியை சேர்ந்த தங்கம் மகன் சிவசங்கரன்(17). நண்பர்களான இவர்கள் இருவரும் பிளஸ்-2 மாணவர்கள்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் மோட்டார் சைக்கிளில் புதுஜெயில் ரோடு மதுரா கோட்ஸ் பாலத்தில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டு 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

படுகாயம் அடைந்த சுதர்சன் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். மேலும் காயத்துடன் உயிருக்கு போராடிய சிவசங்கரனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்