உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து, நாமக்கல்லில் தி.மு.க.வினர் சாலைமறியல் - 27 பேர் கைது

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாமக்கல்லில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-13 18:30 GMT
நாமக்கல்,

மத்திய அரசு நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிராக சென்னையில் நேற்று தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்ட மசோதா நகலை எரித்ததாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைது சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் நகர தி.மு.க. சார்பில் மணிக்கூண்டு அருகே சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் தலைமை தாங்கினார்.

இதில் மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தகுமார் மற்றும் நகர பொறுப்புகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 27 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்