ஆலங்குளம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-13 23:00 GMT
ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் அருண் (வயது 31), விவசாயி. இவருக்கு மதி (27) என்ற மனைவியும், கசலா (4) என்ற மகளும், அரசு (1) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் அருண் நேற்று காலையில் தனது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அருண் அந்த இடத்தில் நின்ற நிலையிலேயே இருந்துள்ளார். நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததை கண்ட அருணின் மனைவி, அவரை கூப்பிடவே கண்டுகொள்ளாமல் இருந்ததால் அருகில் சென்று பார்த்தபோது மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டதும் மதி கதறி அழுதார்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் அருண் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்