பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 874 வழக்குகளுக்கு தீர்வு

பெரம்பலூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 874 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2019-12-14 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) மலர்விழி தலைமையில் நடந்தது.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, தலைமை நீதித்துறை நடுவர் கிரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர்கள் கருப்பசாமி, அசோக் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலுள்ள நிலுவையில் உள்ள வராக்கடன் வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

874 வழக்குகளுக்கு தீர்வு

இதில் 159 வங்கி வழக்குகளில் ரூ.1 கோடியே 24 லட்சத்து 35 ஆயிரத்து 439-க்கும், 64 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.3 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 910-க்கும் தீர்வு காணப்பட்டது. 24 சிவில் வழக்குகளில் ரூ.2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 54-ம், நீதிமன்ற நிலுவையில் உள்ள 10 வங்கி வழக்குகளுக்கு ரூ.28 லட்சத்து 94 ஆயிரத்து 212-ம், 617 சிறு குற்ற வழக்குகளில் ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 600 என மொத்தம் 874 வழக்குகளுக்கு ரூ. 7 கோடியே 97 லட்சத்து 59 ஆயிரத்து 215-க்கு தீர்வு காணப்பட்டது.

தீர்வு பெறப்பட்ட வழக்கின், வழக்குதாரருக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) மலர்விழி நஷ்ட ஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல்கள் இளவரசன், திருநாவுக்கரசு, சங்கர், மணிவண்ணன், துரை, பெரியசாமி, அருணன், சிங்காரம், ராமசாமி, வருவாய்த்துறையினர், போலீசார், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்