கல்லிடைக்குறிச்சியில் பயங்கரம்: கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டி கொலை

கல்லிடைக்குறிச்சியில் கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டி கொலை செய்யப்பட்டார். அவர் மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-12-14 23:15 GMT
அம்பை, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 60). இவரிடம் கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவருடைய மகள் சிவகாமி என்ற விஜி ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சிவகாமியிடம் கடனை திருப்பி கேட்பதற்கு முத்துலட்சுமி சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துலட்சுமி திடீரென்று மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி, கொலை தொடர்பாக முத்துலட்சுமியிடம் கடன் வாங்கிய சிவகாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமியை சிவகாமி கீழே தள்ளி விட்டு உள்ளார். இதில் மயக்கம் அடைந்த முத்துலட்சுமியின் முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் மயங்கி கீழே விழுந்ததில் இறந்து விட்டதாக சிவகாமி நாடகமாடியது அம்பலமானது. மேலும், முத்துலட்சுமி அணிந்திருந்த தங்கச்சங்கிலி, கம்மல் ஆகியவற்றை கழற்றி அடகு வைத்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சிவகாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் அடகு வைத்த நகையையும் மீட்டனர். மூதாட்டியை கொன்றுவிட்டு மயங்கி விழுந்ததில் இறந்ததாக நாடகமாடிய பெண் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்