பிரம்மதேசம் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி - காப்பாற்ற சென்ற உறவினர் படுகாயம்

பிரம்மதேசம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார். காப்பாற்ற சென்ற அவரது உறவினரும் படுகாயமடைந்தார்.

Update: 2019-12-15 22:00 GMT
பிரம்மதேசம்,

பிரம்மதேசம் அருகே உள்ள தலகாணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ், விவசாயி. இவரது மனைவி பவானி(வயது 32). இவர் நேற்று காலை துணிகளை துவைப்பதற்காக அருகே உள்ள உறவினர் சிவகாமி(48) என்பவரது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் துணிகளை தண்ணீரில் ஊற வைத்து விட்டு அருகில் உள்ள கொட்டகையில் இருந்த மின்மோட்டார் சுவிட்சை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சிவகாமி ஓடிவந்து பவானியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு இருவரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பவானி ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சிவகாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணி துவைக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்