குடிபோதையில் தகராறு செய்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி கைது

குடிபோதையில் தகராறு செய்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-17 22:15 GMT
கிரு‌‌ஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டம் கிரு‌‌ஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 43). இவருடைய மனைவி முருகேஸ்வரி (40). இவர்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். தினமும் பரமசிவம் மது குடித்துவிட்டு வந்து முருகேஸ்வரியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று முருகேஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த பரமசிவம், முருகேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முருகேஸ்வரி, அடுப்பில் வைத்திருந்த பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை, பரமசிவம் மீது ஊற்றியுள்ளார். இதில் வலியால் அலறி துடித்த பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், இது குறித்து முருகேஸ்வரி மீது கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்