வேலூர் அருகே, கல்குவாரியில் அழுகிய நிலையில் இளம்பெண் பிணம் - காதல் தகராறில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை

வேலூர் அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்தது. காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-19 00:00 GMT
வேலூர், 

வேலூரை அடுத்த புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் அருகே உள்ள கல்குவாரியில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணமாக கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்தது.. இதனை நேற்று காலை அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையிலான போலீசார் அங்கு சென்று உடலை பார்வையிட்டனர். இளம்பெண் முகத்தின் ஒருபகுதி சிதைந்தும், வலதுகால் எலும்பு முறிந்தும் வெளியே தெரிந்தது. அழுகிய நிலையில் உடல் காணப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்து 2 நாட்களுக்கு மேலாக இருக்கும் என்று தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் முதற்கட்டமாக அந்த இளம்பெண் யார்? என்ற விசாரணையில் இறங்கினர். வேலூர் மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ள விபரங்களை போலீசார் சேகரித்தனர். அதில், வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 17 வயது இளம்பெண் கடந்த 14-ந் தேதி மாயமானதாக 16-ந் தேதி புகார் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அந்தபெண் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா (வயது 17) என்பதும், பிளஸ்-2 படித்த அவர் கடந்த சில மாதங்களாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிந்து வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும், கடந்த 14-ந் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு மொபட்டில் சென்ற நிவேதா மாலையில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நிவேதாவின் மொபட் மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து நிவேதாவின் பெற்றோர் 16-ந் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதில், நிவேதாவின் இடதுகை பெருவிரலில் ஸ்டார் மற்றும் வலதுகையில் பறவையின் சிறகை பச்சை குத்தி இருந்ததாக அங்க அடையாளங்கள் ெதரிவித்திருந்தனர். இந்த அங்க அடையாளங்கள் கல்குவாரியில் கிடந்த இளம்பெண்ணின் உடலில் காணப்பட்டன.

இதுகுறித்து நிவேதாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பெற்றோர் நிவேதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். அந்த உடல் நிவேதாவின் உடல் என்று போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நிவேதா கொணவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் நிவேதா கேன்டீனில் வேலை செய்தபோது மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவாலிபர்களும் நிவேதாவை காதலித்து வந்துள்ளனர். அதில், ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்படி நிவேதாவிற்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் 14-ந் தேதி வேலைக்கு சென்ற நிவேதாவை வாலிபர் ஒருவர் தீர்த்தகிரி மலைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு வைத்து ஏற்பட்ட காதல் தகராறில் வாலிபர் மலைப்பாதையில் இருந்து 80 அடி ஆழமான கல்குவாரியில் நிவேதாவை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். 14-ந் தேதி காலை 11 மணிக்கு அலமேலுமங்காபுரம் அருகே நிவேதாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நிவேதா பணிபுரிந்த மருத்துவமனை மற்றும் அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். நிவேதா கற்பழித்து கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்