தூத்துக்குடி அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தொழிலாளி பலி

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் தொழிலாளி பலியானார்.

Update: 2019-12-19 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் ராமசந்திராபுரத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 40) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக விஜயா, ஆழ்வார்திருநகரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அவரை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் இரவு ஆசைத்தம்பி தனது மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரிக்கு புறப்பட்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் சமத்துவபுரம் பகுதியில் ஆசைத்தம்பி சென்ற போது எதிரே சுற்றுலா பஸ் ஒன்று வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ஆசைத்தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக தருவைகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசைத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்