தஞ்சை விமானப்படை தளத்தில் தென்னக தலைமை தளபதி ஆய்வு

தஞ்சை விமானப்படை தளத்தில் தென்னக தலைமை தளபதி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-12-23 23:00 GMT
தஞ்சாவூர்,

தென்னக விமானப்படையில் முதன்மை விமானப்படை தளமாக தஞ்சை விமானப்படை தளம் விளங்குகிறது. இந்த தளத்துக்கு தென்னக விமானப்படை தலைமை தளபதி ஏர்மார்‌‌ஷல் அமித்திவாரி நேற்று வந்தார். அவரை தள அணி தலைவர் பிரஜூல்சிங் வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட தலைமை தளபதி ஏர்மார்‌‌ஷல் அமித்திவாரி பேசும்போது, வளங்களை மேம்படுத்துதல், செயலில் நிபுணத்துவம், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி, மேம்பட்ட பயிற்சி, தொழில் திறன் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

ஆய்வு

இதைத்தொடர்ந்து தளத்தில் உள்ள பல்வேறு துறைகளையும், பிரிவுகளையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும் பார்வையிட்டு பாராட்டினார். இந்த தளத்தில் எஸ்.யு.30 என்கிற போர் ரக விமானம் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் விரைவாக செயல்படுத்துவதையும், தென் மண்டலத்தில் முதன்மை போர் தளமாக வளர்ச்சி அடைந்து வருவதையும் பாராட்டினார்.

மண்டல வான்படை மனைவியர் சங்க தலைவி பூனம்திவாரியை விமானப்படை தள மனைவியர் சங்க தலைவர் வந்தானாசிங் வரவேற்றார். அதைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலுக்கு தலைமை தளபதி சென்று சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்