ஈரோட்டில், கழிவுநீர் ஓடையில் தலையில்லாத வாலிபர் பிணம்
ஈரோட்டில் கழிவுநீர் ஓடையில் மிதந்த தலையில்லாத வாலிபர் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் கழிவுநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் ேபாலீசார் விரைந்து சென்று கழிவுநீர் ஓடையில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் மிகவும் அழுகிய நிலையில் தலை இல்லாமல் இருந்தது.
இதனால் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
யாரேனும் அவரை கொலை செய்து கழிவுநீர் ஓடையில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலையில்லாமல் வாலிபர் பிணம் கழிவுநீர் ஓடையில் கிடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.