விக்கிரமசிங்கபுரத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் நகைக்கடையில் 75 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளை அடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-25 22:45 GMT
விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் ராஜ். இவர் விக்கிரமசிங்கபுரம் மூன்று லேம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் ரத்தினா என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவில் கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு ராஜ் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் கடையை ஊழியர்கள் திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜிக்கும், விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கடையை பார்வையிட்டனர். அப்போது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு இருந்த 75 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய எந்திரத்தையும் மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர். இதனால் மர்ம நபர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நெல்லை, குற்றாலத்தை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் வெளியூர்களில் வைத்து கைது செய்துள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 4 பேர் ஈடுபட்டு இருந்ததாகவும், அவர்களுக்கு வெளிமாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களின் பெயர்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்