காரைக்காலில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காரைக்காலில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால், பண்டிகை நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2019-12-25 22:45 GMT
காரைக்கால்,

காரைக்காலில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்த மழை நேற்று முன்தினம் இரவு மீண்டும் பெய்தது.

விடிய விடிய பரவலாக மழை பெய்ததால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நள்ளிரவு பிரார்த்தனைக்கு தேவாலயங்களுக்கு செல்ல முடியாமல் கிறிஸ்தவர்கள் அவதிப்பட்டனர். பல ஆலயங்களில் திறந்தவெளியில் சிறப்பு திருப்பலிக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக, கடைசி நேரத்தில் ஆலயம் உள்ளே திருப்பலி நடத்தப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

மழையின் காரணமாக, காரைக்கால் பி.கே சாலை, காமராஜர் சாலை, பாரதியார் வீதியில் மழை நீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது. அதனால் அந்த சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், காரைக்கால் வானொலி நிலையம் அருகிலுள்ள உதயம் நகர், வேட்டைக்காரன் தெரு, இடும்பன் செட்டியார் சாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இந்த மழையால் பண்டிகை நாளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்