திருச்சியில் சகோதரிக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் மீது வழக்கு

திருச்சியில் சகோதரிக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-12-26 22:15 GMT
திருச்சி,

தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடந்தது. திருச்சியில் அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வினை எழுத மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி(வயது 26) விண்ணப்பித்து இருந்தார்.

ஆள்மாறாட்டம்

அதன்படி அவருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ராமலெட்சுமிக்கு பதிலாக, அவரது தங்கை மீனாட்சி(23) ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி இருந்தார். அதன்பிறகு நடந்த விசாரணையில் அவர், ஹால்டிக்கெட்டில் தனது புகைப்படத்தை ஒட்டி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது.

பெண் மீது வழக்கு

இதனை தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகவியல் நிறுவன சங்கம் சார்பில் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில், மீனாட்சி மீது அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு வழக்குப்பதிவு செய்து, சகோதரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளார்.

மேலும் செய்திகள்