குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

காரிமங்கலம் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-27 22:45 GMT
காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி லட்சுமி (வயது24). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 மாதத்தில் கனி‌‌ஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்து வைத்தனர். பின்னர் கணவன்-மனைவி 2 பேரும் தூங்க சென்று விட்டனர். நேற்று காலை வேல்முருகன் எழுந்து பார்த்த போது லட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 2½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் (பொறுப்பு) தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்