தேன்கனிக்கோட்டை அருகே, மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-27 22:30 GMT
தேன்கனிக்கோட்டை, 

கிரு‌‌ஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் மோகன் (வயது 19). சாமல்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன் (17). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்தநிலையில் நேற்று மோகன், பரசுராமன் ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளில் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அதே போல தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கலுகோபசந்திரத்தை சேர்ந்த முனியப்பா என்பவருடைய மகன் சதீ‌‌ஷ் (28). இவர் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வழியில் தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணங்கூர் என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் மோகன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பரசுராமன், சதீ‌‌ஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் பரசுராமன் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், சதீ‌‌ஷ் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் உயிரிழந்த மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்