ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலி - மற்றொரு மாணவர் மாயம்

எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கடலில் குளிக்கச் சென்ற போது திடீரென தோன்றிய ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவர் பலியானார் மற்றொரு மாணவர் மாயம்.

Update: 2019-12-27 23:00 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சரவணா நகரைச் சேர்ந்தவர் வினோத்(வயது 14). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தன்னுடைய நண்பர்களான 8-ம் வகுப்பு மாணவர்கள் மகாதேவன்(13), விக்னேஷ்(13) மற்றும் 7-ம் வகுப்பு மாணவர் கிஷோர்குமார்(12) ஆகியோருடன் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு நேற்று மாலை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கடலில் குளிக்கச் சென்றார்.

மாணவர்கள் 4 பேரும் கடலில் குளித்து விளையாடினர். அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கி வினோத்தும், மகாதேவனும் தத்தளித்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற விக்னேஷ் மற்றும் கிஷோர்குமாரும் ராட்சத அலையில் சிக்கினர்.

இவர்களின் கூச்சல் கேட்டு அங்கிருந்த மீனவர்கள் விரைந்துவந்து விக்னேஷ், கிஷோர்குமார் இருவரையும் மீட்டு கரை சேர்த்தனர். ராட்சத அலையில் சிக்கிய வினோத் உடல் சிறிதுநேரம் கழித்து அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அவர், நீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த எண்ணூர் போலீசார், கடலில் மாயமான மற்றொரு மாணவரான மகாதேவனை மீனவர்கள் உதவியுடன் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்