ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு - 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-12-29 22:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜரின் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ மர்ம நபர்கள் அவமரியாதை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் 300-க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலையின் அருகிலும், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை அவமரியாதை செய்த நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் சிலையை அவமரியாதை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 29) என்பவர் போலீசில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்