தொடர் விடுமுறையால் கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

Update: 2020-01-01 22:30 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டும் கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக நேற்று கிரு‌‌ஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டம்

இதையொட்டி அந்த பூங்காக்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் வியாபாரம் அதிக அளவில் நடந்தது. பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை பூங்காவில் உள்ள சறுக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாட வைத்து மகிழ்ந்தனர். அதே போல அணையின் மேற்புரத்தில் உள்ள மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் மீன்வறுவல் விற்பனை அமோகமாக நடந்தது. அணை பூங்கா, அவதானப்பட்டி பூங்காவிலும் நேற்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால், எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்