வாக்கு எண்ணும் மையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 58). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்தார்.
துரிஞ்சாபுரம் ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு பள்ளியில் எண்ணப்பட்டது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் இரவு முருகதாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.