மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2020-01-02 21:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ருத்ரமூர்த்தி வேலையை முடித்துவிட்டு சென்னையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான தாமோதரன் (20) என்பவருடன் பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை தாமோதரன் ஓட்டிச் சென்றார்.

திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த ருத்ரமூர்த்திக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். பலத்த காயம் அடைந்த தாமோதரனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாமோதரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்