திருச்செந்தூர் அருகே, பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை

திருச்செந்தூர் அருகே மகன் தகராறு செய்ததால் மனமுடைந்த பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-03 22:30 GMT
திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி கூழ பெரியவன்விளையைச் சேர்ந்தவர் ஆத்திக்கண் (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி தேவகி (43). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன், பிளஸ்-1 படித்து விட்டு, கூலி வேலைக்கு சென்று வருகிறார். அவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லவில்லை.

இதனை தாயார் கண்டித்தார். இதனால் தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தேவகி சம்பவத்தன்று தனது வீட்டில் வி‌‌ஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தேவகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகன் தகராறு செய்ததால், தாய் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்