போலி ‘ஆர்.சி. புக்' தயாரித்து திருட்டு மோட்டார் சைக்கிளை விற்ற வாலிபர் கைது பரபரப்பு தகவல்

வட்டார போக்குவரத்து ஊழியரின் துணையுடன் போலி ‘ஆர்.சி. புக்’ தயாரித்து திருட்டு மோட்டார் சைக்கிள்களை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-05 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், தனிப்படை போலீசார் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் தனது கூட்டாளிகளுடன் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி, உதிரி பாகங்களை மாற்றி போலி ‘ஆர்.சி. புக்’ தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது. போலி ஆர்.சி. புக் தயாரிக்க திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜெபின் (30) என்பவர் உதவியுள்ளார். இவர் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கைது

இதையடுத்து ஆனந்த், ஜெபின் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஞாறான்விளையை சேர்ந்த ராகுல், அனிஷ் மாத்யூ உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்