எட்டயபுரம் அருகே, கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்; வாகன புகை பரிசோதனை மைய உரிமையாளர் பலி

எட்டயபுரம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் வாகன புகை பரிசோதனை மைய உரிமையாளர் பலியானார்.

Update: 2020-01-11 22:45 GMT
எட்டயபுரம், 

தூத்துக்குடி மீளவிட்டான் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் ஜோதி சந்தோஷ்குமார் (வயது 38). இவர் அப்பகுதியில் வாகன புகை பரிசோதனை மையம் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மதுரைக்கு தனது காரில் சென்றார். பின்னர் அவர், நேற்று அதிகாலையில் அங்கிருந்து காரில் தூத்துக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் கோட்டூர் விலக்கு நாற்கரசாலை சந்திப்பு அருகில் சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. இதில் காரில் இருந்த ஜோதி சந்தோஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த ஜோதி சந்தோஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூரைச் சேர்ந்த பாண்டி மகன் ரமேசிடம் (32) விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வக்கனங்குண்டு பகுதியில் கிரானைட் கற்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி, தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

மேலும் செய்திகள்