கன்னியாகுமரியில் மலர் கண்காட்சி 16-ந் தேதி தொடங்குகிறது

கன்னியாகுமரியில் மலர் கண்காட்சி 16-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

Update: 2020-01-11 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உழவர்தினத்தை முன்னிட்டு மலர் கண்காட்சி 16-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.மலர் கண்காட்சி நடைபெற உள்ள இடத்தை குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக்மேக்ரின் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், ஷீலாஜாண், விமலா, கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் சந்திரலேகா உள்பட பலர் உடன் இருந்தனர்.

நுழைவு கட்டணம்

பின்னர் துணை இயக்குனர் அசோக் மேக்ரின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் அரசு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி நடக்கிறது. ஊட்டியை போன்று வித விதமான பூக்கள் இதில் இடம் பெறுகிறது. இதற்காக பெங்களூரு, ஊட்டி போன்ற இடங்களில் இருந்து 500 வீதமான 2 லட்சம் மலர்கள் வரவழைக்கப்பட உள்ளது.

இந்த மலர்கள் மூலம் ராட்சத டைனோசர், டால்பின், சைக்கிள், மாட்டுவண்டி, காளைகள் மற்றும் விதவிதமான அலங்கார வளைவுகள், செல்பி எடுக்கும் மலர் அரங்குகள் போன்றவை இடம் பெறுகிறது. மலர் கண்காட்சியின் தொடக்கவிழா 16-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கி றது. மலர் கண்காட்சியை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலாபயணிகள் பார்க்கலாம். இங்கு பெரியவர்களுக்கு ரூ.50-ம் சிறியவர்களுக்கு ரூ. 20-ம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் இந்த மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 17-ந் தேதி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திரத்தில் மலர் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடக்கிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்