வேட்பு மனு ஆவணங்கள் கிழிப்பு: ஊத்தங்கரை ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

வேட்பு மனு, ஆவணங்கள் கிழிக்கப்பட்டு, கவுன்சிலர்கள் வந்த வேன் கண்ணாடி உடைக்கப்பட்டதின் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஊத்தங்கரை ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-11 23:00 GMT
ஊத்தங்கரை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் 2-ந் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், பா.ம.க. 3 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில் அங்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று காலை நடந்தது. இதற்காக தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என ஒரு அணியாக நேற்று காலை 9 மணிக்கு ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

வேன் கண்ணாடி உடைப்பு

அதன் பிறகு காலை 10.45 மணி அளவில் அ.தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேர் ஒரு அணியாக வேனில் வந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர்கள் வந்த வேன் மீது கற்களை வீசினார்கள். இதில் வேனின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும், வேனை ஓட்டி வந்த கீழ்குப்பத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திகேயன், பெண் கவுன்சிலர் சுகந்தி ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காயம் அடைந்த பெண் கவுன்சிலரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் அமர்ந்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் கிழிப்பு

அப்போது வேட்பு மனு மற்றும் ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன. அதை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் தேர்தலை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரான, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி அறிவித்தார்.

அதன் பிறகு தி.மு.க. கவுன்சிலர்கள் உடனடியாக தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோ‌‌ஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஏராளமான தி.மு.க.வினர் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டு கோ‌‌ஷமிட்டனர். நேற்று காலை முதல் மாலை வரையில் இந்த பிரச்சினை நீடித்தது.

தேர்தல் ஒத்திவைப்பு

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில் ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அன்னபூரணி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊத்தங்கரை ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. பதற்றம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்