அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை திடீரென இறந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-11 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேட்டை சேர்ந்தவர் ஜனகர். இவரது மனைவி ரேவதி (வயது 32). இவர் ரெட்டிப்பட்டி பாரதி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ரேவதி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். கடந்த 9-ந் தேதி ரேவதிக்கு பிரசவவலி ஏற்பட்டது. எனவே அவரது குடும்பத்தினர் ரேவதியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு போதிய வசதி இல்லாததால், டாக்டர்கள் ரேவதியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு ரேவதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் ரேவதிக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 3 கிலோ எடை இருந்தது.

திடீர் சாவு

பிரசவம் முடிந்ததும் ரேவதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மயக்க நிலைக்கு சென்ற ரேவதி திடீரென இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரேவதியின் உறவினர்கள் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் ரேவதிக்கு அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ரேவதியின் உடல் பிரேத பரிசோதனையின் போது அரசு டாக்டர்களுடன் நாங்கள் குறிப்பிடும் டாக்டர் ஒருவரையும் அனுமதிக்க வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

அவர்களுடன் நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் ரேவதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்து போன ரேவதியின் கணவர் ஜனகர் இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்