குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பொறையாறில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-01-11 23:00 GMT
பொறையாறு,

பொறையாறு புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக பொறையாறு ஜும்-ஆ. பள்ளிவாசலில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேப்பமரத்தெரு, சிதம்பர நாடார் தெரு, சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு, வாலியை தெரு வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தை அடைந்தனர்.

அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் அலி அகமது தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வட்டார ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்துல் ஹமீது, தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது, மதரீதியாக இந்தியர்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தி.மு.க. நகர செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நூருல்லா, பொறையாறு முஸ்லிம் உறவின்முறை வகுப்பு நிர்வாக சபை தலைவர் ஷேக் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்