53 வகையான பறவைகள் ஊசுடு ஏரிக்கு வருகை கணக்கெடுப்பில் தகவல்

53 வகையான பறவைகள் ஊசுடு ஏரிக்கு வந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2020-01-12 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலம் ஊசுடு ஏரியில் ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம், யுனிவர்சல் சுற்றுச்சூழல் கழகம் மற்றும் செந்தாமரை அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் பல்வேறு அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து பொங்கல் பண்டிகையையொட்டி பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் நிகழ்ச்சியை நடத்தின.

சர்வதேச கருப்பொருளாக பறவைகளை பாதுகாக்கவும், நெகிழியால் (பிளாஸ்டிக்) ஏற்படும் மாசுபாட்டிற்கான தீர்வாக இருங்கள் என்ற தலைப்பில் இந்த கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கருத்தாளர்கள், பறவை ஆர்வலர்கள், துறைசார் வல்லுனர்கள், அறிவியல் மன்ற மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

53 வகையான பறவைகள்

பறவையியல் வல்லுனர் பூபேஷ் குப்தா பறவைகள் தொடர்பான கையேடுகள், படங்கள், குறிப்புகள் மற்றும் ஓசைகள் மூலம் பறவைகளை அறியும் விதம் குறித்து விளக்கம் அளித்தார். வனப்பறவைகள் கணக்கெடுப்பு, குறிப்புகள் எடுத்தல், பதிவு செய்தல், பட்டியல் தயாரித்தல் ஆகியன பற்றி செந்தாமரை அறக்கட்டளை இயக்குனர் பாலாஜி விளக்கினார். பறவைகளின் வேறுபாடுகளை கண்டறிவது உள்பட பல அரிய தகவல்களை ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் தெரிவித்தார்.

மாணவர்கள் தொலை நோக்கி மூலம் நீர்வாழ் பறவைகளை கண்டுகளித்ததோடு பறவைகளை கணக்கெடுக்கவும் செய்தனர். அப்போது சுமார் 53 வகையான பறவைகள் ஊசுடு ஏரிக்கு வந்திருப்பதாக அறிந்தனர். சிறிய நீர்காகம், சாம்பல் கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், அரிவாள் மூக்கன், குருட்டு கொக்கு மற்றும் நீலவால் இலைக்கோழி போன்ற பறவைகளை கண்டனர்.

ஓவியம் வரைதல்

இறுதியாக பறவைகள் குறித்து மாணவர்கள் ஓவியம் வரையும் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பறவைகள் பற்றிய தொகுப்புகள், கையேடுகள், அட்டவணை, விளக்க அட்டைகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்