குடிபோதையில் தகராறு: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெட்டிக்கொலை மகன் கைது

கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரை வெட்டிக்கொலை செய்த அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-12 23:00 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை ரோடு சிராஜ் நகரில் வசித்து வந்தவர் கருப்புசாமி(வயது 48). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி அமுதவள்ளி. இவர்களது 17 வயது மகன் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக சிறுமுகை அருகே இரும்பறையில் வாடகைக்கு வீடு எடுத்து அமுதவள்ளி தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கருப்புசாமி நேற்று முன்தினம் இரவு அமுதவள்ளியை செல்போனில் தொடர்பு கொண்டு ‘உன்னோடு பேச வேண்டும், வீட்டுக்கு வா‘ என்று அழைத்து உள்ளார். அதை நம்பி அமுதவள்ளி தனது மகனுடன் கருப்புசாமியின் வீட்டிற்கு சென்றார்.

அரிவாளால் வெட்டிக்கொலை

அங்கு குடிபோதையில் இருந்த கருப்புசாமி, அவர் களை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை அவருடைய மகன் கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்புசாமி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மகனை வெட்ட முயன்றார். அதை தடுத்து, கருப்புசாமியிடம் இருந்து அரிவாளை பிடுங்கி, மகனே சரமாரியாக அவரை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்புசாமியின் மகனை கைது செய்தனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்