மேலூர் அருகே பரிதாபம்: வீட்டின் சுவர் இடிந்து 2 குழந்தைகள் பலி

மேலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-01-12 23:00 GMT
மேலூர்,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி ஜீவா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உண்டு. அதில் மகாவிஷ்ணு (வயது 5), அஜிஸ்ரீ (3) ஆகிய இரு குழந்தைகள் நேற்று பக்கத்தில் உள்ள செந்தில் என்பவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென அந்த வீட்டின் சுவர் இடிந்து குழந்தைகள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விசாரணை

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி குழந்தைகளின் உடல்களை மீட்டனர். குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் தாசில்தார் சிவகாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்