ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கொத்தமங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார்.

Update: 2020-01-14 22:00 GMT
கீரமங்கலம், 

சுரேஷ், கடந்த 7–ந் தேதி இரவு கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்த போது, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் தலைமையிலான போலீசார் தொடந்து நடத்திய விசாரணையில், சுரேஷின் உறவினராக தஞ்சாவூர் மாவட்டம், சித்துக்காடு கிராமத்தை சேர்ந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பது அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சரவணனின் உறவினரான சித்துக்காடு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் போத்திராஜா (27) கொத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி ராஜ்மோகனிடம் சரணடைந்தார். இதை தொடர்ந்து போத்திராஜாவை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது பெரியப்பா மகள் விஜயலட்சுமி, மர்மமான நிலையில் இறந்த சம்பவத்திற்கு சுரேஷ் குடும்பத்தினரே காரணமாக இருக்க வேண்டும் என்று சரவணன் கூலிப்படையை அமைத்த போது, அந்த கூலிப்படை ஆட்களுக்கு சுரேஷை யார் என்பதை அவரது ஓட்டலுக்கே சென்று அடையாளம் காட்டினேன் என்று கூறினார். 

மேலும் செய்திகள்