ரூ.5 லட்சத்தை கேட்டு கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் காரில் கடத்தல் - தானிப்பாடி அருகே பரபரப்பு
ரூ.5 லட்சத்தை கேட்டு தானிப்பாடி அருகே தனியார் கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் காரில் கடத்தப்பட்டார்.
தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகிலுள்ள பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 43), அதே ஊரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தல், இ-சேவை மையத்தில் மேற்கொள் ளப்படும் சேவைகள் ஆகியவற்றையும் இவர் மேற்கொண்டு வருகிறார். கோவிந்தராஜ் அங்குள்ள பலரிடம் ஆன்லைன் மூலம் வைப்பு நிதி வாங்கி அதனை கோவையில் உள்ள ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனியில் முதலீடு செய்து வாரம் தோறும் ஒரு சதவீதம் வட்டி வாங்கி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த கம்பெனி மூடப்பட்டது. இவரிடம் திருவண்ணாமலை அருகில் உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவரும் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கேட்டபோது கோவிந்தராஜ் திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் காரில் பெருங்குளத்தூருக்கு வந்தார். அவர் திடீரென கோவிந்தராஜை தனது காருக்குள் தள்ளி கதவை பூட்டி கடத்தி சென்று விட்டதாக கோவிந்தராஜின் மனைவி சுமதி தானிப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜையும் அவரை கடத்தியதாக கூறப்படும் சுபாசையும் தேடி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் மைய உரிமை யாளர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.