தேவர்குளம் அருகே, மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தேவர்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-14 23:00 GMT
பனவடலிசத்திரம்,

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் மஞ்சுநாதன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள டயர் கம்பெனியில் வேலை பார்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் இதுவரை வேலைக்கு செல்லாமல் இருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாலை பனை ஓலை வெட்டுவதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

தேவர்குளத்தில் இருந்து முத்தம்மாள்புரம் செல்லும் சாலையில் சென்றபோது அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்ஒயர் அறுந்து கிடந்தது.

அதன் மீது மோட்டார் சைக்கிள் உரசியபடி சென்றதில் மின்சாரம் தாக்கி மோட்டார் சைக்கிளில் இருந்து மஞ்சுநாதன் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேவர்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மஞ்சுநாதன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாதகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக பனை ஓலை வெட்டச் சென்றபோது மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்