போலீஸ் டி.ஐ.ஜி. மீது மானபங்க புகார்: மாயமான சிறுமி உத்தரகாண்டில் மீட்பு
போலீஸ் டி.ஐ.ஜி. மீது மானபங்க புகார் அளித்து மாயமான நவிமும்பை சிறுமி உத்தரகாண்டில் மீட்கப்பட்டுள்ளார்.
மும்பை,
போலீஸ் டி.ஐ.ஜி. மீது மானபங்க புகார் அளித்து மாயமான நவிமும்பை சிறுமி உத்தரகாண்டில் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி மாயம்
புனேயில் போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருப்பவர் நிஷிகாந்த் மோரே. இவர் மீது நவிமும்பை போலீஸ் நிலையத்தில் ராபாலேவை சேர்ந்த 17 வயது சிறுமி மானபங்க புகார் அளித்து இருந்தார்.
இந்தநிலையில் சமீபத்தில் அவர், தனது சாவுக்கு டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டேராடூனில் மீட்பு
இதையடுத்து டி.ஐ.ஜி. நிஷிகாந்த் மோரே மற்றும் அவருக்கு ஆதரவாக சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டிய முதல்-மந்திரியின் அணிவகுப்பு வாகன டிரைவரான போலீஸ்காரர் தின்கர் சால்வே ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக மாயமான சிறுமி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மீட்கப்பட்டுள்ளார். அவருடன் 19 வயது நண்பர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி நவிமும்பை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.