சேலத்தில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி நண்பர்கள் 6 பேர் கைது

சேலத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தார். இதுதொடர்பாக நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-16 22:15 GMT
கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கவுதம்(வயது 22), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்தநிலையில் அவர் தனது நண்பர்கள் உதவியுடன் அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கவுதம் மற்றும் அந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.

6 பேர் கைது

இதையடுத்து குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் கீழ் கவுதம் மற்றும் அவருடைய நண்பர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்து கவுதமின் நண்பர்களான சிவதாபுரம் பகுதியை சேர்ந்த விஜயராஜ்(22), கமலக்கண்ணன்(21), மதியழகன்(22), விஜயகுமார்(23), புஷ்பராஜ்(21), சக்திவேல்(22) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே சிறுமியின் உறவினர்கள் தன்னை தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி கவுதம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்