கடலூர் செம்மண்டலம் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2020-01-16 23:00 GMT
கடலூர்,

கடலூர் செம்மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு முன்பக்கம் 2 மாடியில் அலுவலகமும், பின்புறம் கிடங்குகளும் அமைந்துள்ளன. பொதுவினியோக திட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் இங்குள்ள குடோன்களில் இறக்கி வைக்கப்படும். பின்னர் அவை இங்கிருந்து கடலூர் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் நேற்று அலுவலகத்தின் 2-வது மாடியில் உள்ள பக்கவாட்டு ஜன்னல் வழியாக புகை வெளியேறுவதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

பொருட்கள் எரிந்து சேதம்

அதன்பேரில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களுடன் விரைந்து வந்து அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதில் துணை மேலாளர் (கணக்கு) அலுவலகம், தணிக்கை பிரிவு அலுவலகம் ஆகியவற்றில் உள்ள நாற்காலிகள், கணினிகள் மற்றும் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்