கடத்தூர் அருகே, பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

கடத்தூர் அருகே பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2020-01-17 22:30 GMT
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் செந்தில் (வயது 28). ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் மகன் சரத் (27). இவர்கள் கடத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ேவலை செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்தூரில் இருந்து தங்களது சொந்த கிராமத்திற்கு சென்றனர்.

கடத்தூர்-தர்மபுரி சாலையில் சென்ற போது மணியம்பாடி அடுத்த மாரியம்மன் கோவில் நகர் அருகே தர்ம புரியில் இருந்து மோட்டாங்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செந்தில், சரத் இருவரும் பலியாகினர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணும் பொங்கல் அன்று விபத்தில் 2 வாலிபர்கள் இறந்ததால் அந்த கிராமங்கள் சோகத்தில் மூழ்கின.

மேலும் செய்திகள்