களக்காடு அருகே, வாலிபர் கொலையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

களக்காடு அருகே வாலிபர் கொலையில் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-01-17 22:30 GMT
களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பூலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்ற சுடலைக்கண்ணு (வயது 23). இவரது தந்தை இறந்து விட்டதால், தனது தாயாருடன் புனேவில் தங்கி, இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷின் பாட்டி இறந்ததால், சுரேஷ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு சிங்கிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அவர் தனது நண்பர்கள் சிலருடன் பொங்கல் பண்டிகைக்காக சென்றார்.

அன்று மாலையில் சிங்கிகுளத்தில் இருந்து பூலத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். சிங்கிகுளம் மாரியம்மன் கோவில் அருகே வந்த போது, திடீரென 11 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பூலத்தை சேர்ந்தவர்கள் திரண்டு சென்று சிங்கிகுளத்தில் உள்ள சில வீடுகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். சுரேஷின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிங்கிகுளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை, பூலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர். இந்த காதல் திருமணத்தால் இரு கிராமத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சிங்கிகுளத்தில் நடந்த பொங்கல் விழாவில் இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அந்த விழாவிலும் இரு கிராமத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிங்கிகுளத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் தான், சுரேஷை வழிமறித்து படுகொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிங்கிகுளத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து சிங்கிகுளம், சடையமான்குளம், காடுவெட்டி, மேலதேவநல்லூர், கீழதேவநல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. இந்த கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வருகின்றனர்.

மேலும் செய்திகள்