அன்னூர் அருகே, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி - போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

அன்னூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-01-18 22:45 GMT
துடியலூர், 

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). கூலி தொழிலாளி. இவருக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த், மாணவியிடம் பேச்சுக்கொடுத்தார். அவரும், தெரிந்தவர் என்பதால் பேசி உள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரவிந்த், அந்த மாணவியை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று உள்ளார்.

பின்னர் அவர், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அங்குள்ள சோளக்காட்டுக்கு தூக்கிச் சென்றார். இதை, அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரும் பார்த்து பின்தொடர்ந்து சென்றார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சோ்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சல் போட்டார். அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் பயந்துபோன அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பொது மக்கள் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவி தனக்கு நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தப்பி சென்ற அரவிந்த், காளிதாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்