தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கிராமிய கலை விழா

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கிராமிய கலை விழா நடைபெற்றது.

Update: 2020-01-18 22:30 GMT
பொறையாறு,

பாரம்பரிய, மரபு மற்றும் கிராமிய கலைகளை வம்சாவழியாக நடத்திவரும் கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளின் சிறப்பை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கிலும் பாரம்பரிய கிராமிய கலை விழாவை தரங்கம்பாடி, தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் மக்கள் அதிகமாக கூடும் நாட்களில் நடத்த தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பொங்கல் பண்டிகையையொட்டி நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கிராமிய கலை விழா நடந்தது. விழாவிற்கு கோட்டையின் காப்பாட்சியர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரபு வழி கலைஞர்கள் கலந்து கொண்டு கட்டைகால் ஆட்டம், மாடாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், சிவசக்தி காளியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்