பரவலாக மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-01-18 23:00 GMT
கடலூர்,

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடலூர் மாவடடத்தில் போதிய அளவு பெய்தது. வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை வானில் கருமேகங்கள் திரண்டது. பின்னர் காலை 9.45 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை காலை 11 மணி வரை நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.

பரவலாக மழை

திடீரென பெய்த இந்த மழையால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது.

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

விவசாயிகள் கவலை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் கடலூர் மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்தனர். இவை நன்கு செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்